சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் 3 பெண் தரகர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 10 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனின் உத்தரவின் பேரில் சென்னை நகரில் செயல்படும் விபச்சார விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 தினங்களாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தண்டையார்பேட்டை, வடபழனி, அண்ணாநகர் மேற்கு போன்ற இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அண்ணாநகரில் உள்ள போலி மசாஜ் கிளப்பில் நடத்திய சோதனையில், அங்கு விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட 10 இளம்பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். 3 பெண் தரகர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தரகர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்களை மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.