ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்க மருந்தை எடுத்துக் கொண்ட சென்னை வாலிபர் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த ராம்கி என்பவர், திருவொற்றியூர் அருகில் உள்ள ஜிம்மில் சமீபத்தில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்களாக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
உடலை கட்டுக்கோப்பாக மாற்ற, அவருக்கு ஊக்க மருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, ராம்கி அந்த ஊக்க மருந்தை கடந்த சில நாட்களாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென மூன்று நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை. அதனால் வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஜிம் பயிற்சியாளர் பரிந்துரை செய்த ஊக்க மருந்தால்தான் அவரது உயிரிழப்பிற்கு காரணம் என, ராம்கியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.