Publish Date: Tue, 12 Oct 2021 (11:33 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (11:35 IST)
தமிழகத்தில் விஜயதசமி அன்று கோவில்கள் திறக்க வாய்ப்பு உள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எனினும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரம் முழுவதும் கோவில்களை திறக்க பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் விஜயதசமி அன்று கோவில்களை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணையை இன்று மேற்கொண்ட உயர்நீதிமன்றம், தமிழகத்தில் விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கையும் மதியம் 1.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.