Publish Date: Fri, 17 Apr 2020 (11:06 IST)
Updated Date: Fri, 17 Apr 2020 (11:09 IST)
சென்னையில் நேற்று புதிதாக மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 65 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 32 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், அண்ணா நகரில் 23 பேரும், தண்டையார்பேட்டையில் 20 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையை விட இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.