சென்னை ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டிற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் மின் கட்டணம் வந்ததை அடுத்து, அந்த பணத்தை கட்ட முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார், இரண்டு மாடிகளுடன் கூடிய சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2020 முதல் 2025 வரை செலுத்தப்படவில்லை.
மின்வாரிய ஊழியர்களின் கவனக்குறைவால், இந்த நீண்ட காலத்திற்கு மின்கட்டணம் பெறப்படாத நிலையில், சமீபத்தில் மின்வாரிய ஊழியர்கள் இதை கண்டுபிடித்தனர். அவர்கள் மொத்தமாக ரூ.2.10 லட்சத்தை கட்டும்படி அறிவுறுத்தினர்.
ஆனால், விஜயகுமாரிடம் அவ்வளவு பணம் இல்லாததால், சமீபத்தில் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக மின் கட்டணம் கேட்காதது மின்வாரியத்தின் தவறு என்றும், கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு அளித்திருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பை துண்டித்ததன் காரணமாக விஜயகுமார் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது பெரும் கவலைக்குரிய சம்பவமாக உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.