Publish Date: Fri, 18 Apr 2025 (15:32 IST)
Updated Date: Fri, 18 Apr 2025 (15:35 IST)
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் சந்திக்கும் முக்கிய சிரமங்களில் ஒன்றாக பஸ்கள் இல்லாதது குறிப்பிடப்படுகிறது.
தற்போது, விமான நிலைய வளாகத்திற்குள் நேரடியாக மாநகர பஸ்கள் செல்ல அனுமதியில்லை. இதனால் பஸ்களில் பயணிக்க விரும்பும் மக்கள், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவை கால்நடையாக கடந்துவிட்டு, ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இது பெரிய லக்கேஜ் உடன் வரும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி, கடைசியில் அவர்கள் கால்டாக்ஸிகளை நாடும் நிலையை உருவாக்குகிறது. இதைத் தவிர்க்க, விமான நிலைய வளாகத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, விரைவில் மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. விமான நிலையம் இணைக்கும் வகையில் தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பஸ்கள் இயக்கப்படும் என பஸ் நிர்வாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.