Publish Date: Tue, 31 Oct 2017 (11:25 IST)
Updated Date: Tue, 31 Oct 2017 (11:30 IST)
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை புரட்டி போட்டது மழை வெள்ளம். தேசமே சென்னைக்காக சோகக்கண்ணீர் வடித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையிலிருந்து நீர் திடீரென திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னை நகரமே நீரில் மிதந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு சென்னையில் கனமழை அல்லது மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் தற்போதைய நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.90 அடியாக உள்ளது. நேற்று 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு இன்றைய காலை நிலவரப்படி 452 மி.கன அடியாக உயர்ந்தது.