சென்னையில் தொடர்ச்சியாக நடந்த நகைப் பறிப்புகளில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, போலீஸார் அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பலியான ஜாஃபர் குலாமின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜாஃபர் குலாம் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கைத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்து, மும்பை செல்ல விமானத்தில் ஏறத் தயாராக இருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு நடைபெற்றுள்ளது. விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.