Publish Date: Wed, 18 Jul 2018 (11:20 IST)
Updated Date: Wed, 18 Jul 2018 (11:25 IST)
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செல்போன் பறித்து சென்ற இரு திருடர்களை வாலிபர் ஒரு துரத்தி சென்று பிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் ப்ரீத்தி(23) என்பவர் நேற்று முன் தினம் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த இருவர், அவரை வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றனர்.
ஆனால், செல்போனை ப்ரீத்தி இறுக்கமாக பிடித்துக்கொள்ள அவரை தாக்கிய கொள்ளையர்கள் அவரிடமிருந்ந்து செல்போனை பறித்துகொண்டு பைக்கில் தப்ப முயன்றனர். ஆனால், அவர்களை தப்ப விடாமல் செய்ய அவர்களின் பைக்கை பிடித்துகொள்ள, அவர்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனால், சாலையில் ப்ரீத்தி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு காயம் அடைந்தார். வழிபொறுக்க முடியாமல் அவர் பிடியை விட அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை அனைத்தும் அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
ஆனால், விக்னேஷ் என்கிற வாலிபர் அந்த கொள்ளையர்கள் 4 கி.மீ துரத்தி சென்று தி.நகர் பேருந்து நிலையம் அருகே அவர்களின் பைக் மீது வேகமாக மோதினர். இதில், நிலைகுலைந்த கொள்ளையன் ஒருவன் கீழே விழுந்தான். அவனை விக்னேஷ் பிடித்து கொண்டார். மற்றொருவன் தப்பி ஓட, அவன் திருடன்.. பிடியுங்கள் என விக்னேஷ் சத்தம் போட அங்கிருந்த பொதுமக்கள் அவனை பிடித்தனர். இருவரையும் மாம்பலம் காவல் நிலையத்தில் விக்னேஷ் ஒப்படைத்தார்.
பிடிபட்ட இருவர் மீது வழிப்பறி, கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தைரியமாக கொள்ளையர்களை துரத்தி சென்று பிடித்த விக்னேஷை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.