Publish Date: Fri, 03 Jul 2020 (11:32 IST)
Updated Date: Fri, 03 Jul 2020 (11:34 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கில் கிட்டத்தட்ட முக்கிட குற்றவாளிகளான காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தப்பிய ஒரு காவலரை தேடி பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
அதன்படி சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். அனைவர் மீதும் கொலை வழக்கு மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தேடி பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சிபிசிஐடியின் இந்த உடனடி நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.