Publish Date: Wed, 12 Sep 2018 (05:45 IST)
Updated Date: Wed, 12 Sep 2018 (10:38 IST)
பெண் காவலர்களை மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் புல்லட் நாகராஜ் தான் போதையில் உளறிவிட்டதாக கதறியுள்ளார்.
கடந்த வாரம் சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளாவிற்கும்,பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்த புல்லட் நாகராஜன் என்ற ரௌடி அவர்களை மிரட்டியதுடன், அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? உங்கள் மேல் லாரி ஏறும் என கொலை மிரட்டல்கள் விடுத்தார்.
இந்நிலையில் என் தலைமுடியை கூட தொட முடியாது என சவால் விட்ட புல்லட் நாகராஜை தலையிலே தட்டி இழுத்துச் சென்றனர் போலீஸார். அப்போது ரவுடி புல்லட் நாகராஜிடம் இருந்து கள்ளநோட்டுகள், போலி துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் போலீஸார் அவனை திருச்சி மத்திய சிறையில் வைத்து விசாரித்த போது, போலீஸ் ஏட்டு ஒருவர் தான் மது வாங்கிக் கொடுத்து, பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்க வைத்து மாட்டிவிட்டு விட்டதாக கூறினான். எனினும் இவன் கூறியது உண்மையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரஃப் அண்ட் டஃப் ஆக பேசிய புல்லட் சார் சிறையில் அப்பாவி போல இருந்தாராம். உடம்பு சரியில்லாமல் இருப்பது போல பாவலா காட்டியுள்ளார். இதற்கு காரணம் பல்வேறு குற்ற சம்பவங்களில் புல்லட் நாகராஜ் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான எதிரிகள் இருப்பதாகவும், அதில் சிலர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதற்காகவே அவன் பம்மியுள்ளான்.
இதனையடுத்து போலீஸார் அவனை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். ஏகபோகமாக வசனம் பேசிய புல்லட் நாகராஜ் சிறையில் புஸ்வானமாகிய சம்பவம் காமெடியாக உள்ளது.
webdunia
Publish Date: Wed, 12 Sep 2018 (05:45 IST)
Updated Date: Wed, 12 Sep 2018 (10:38 IST)