சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி, பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் சாதாரணமானதாக கருதாமல், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.