Publish Date: Wed, 12 Apr 2023 (11:31 IST)
Updated Date: Wed, 12 Apr 2023 (11:33 IST)
செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருக்கும் செல்வகுமார் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி ஆகியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் வெளியிட்ட பதிவில் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வகுமார் கைது செய்யப்பட்ட தகவல் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran