Publish Date: Sun, 24 Apr 2022 (15:38 IST)
Updated Date: Sun, 24 Apr 2022 (15:43 IST)
பிரதமர் மோடி – அம்பேத்கர் ஒப்பீடு குறித்த விவாதத்திற்கு வரலாம் என விசிகவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றிற்கு முகவுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் கொள்கைகளை பிரதமர் மோடி உள்வாங்கி திட்டங்களாக நிறைவேற்றி வருவதாக பெருமைப்படுத்தி கூறியிருந்தார்.
அம்பேத்கர் – பிரதமர் மோடி குறித்த இளையராஜாவின் இந்த ஒப்பீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக இளையராஜாவை ஆதரித்து கருத்து தெரிவித்தது.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி – அம்பேத்கர் ஒப்பீடு குறித்து விவாதிக்க தயார் என கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, விவாதத்திற்கு வருமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு சவால் விட்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய திருமாவளவன் “அம்பேத்கர் பற்றி பேச மோடியே தகுதியற்றவர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மோடி, அமித் ஷா படித்திருப்பார்களா? வாதம் செய்ய வேண்டுமானால், மோடிக்கும் திருமாவளவனுக்கும் இடையே வாதம் நடக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
பின்னர் தனது சவாலை திருமா ஏற்காதது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலை பேச, அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ”இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில் இருந்து முதல் 10 பக்கத்தை மட்டும் தங்களுக்கு படித்துக் காட்ட விரும்புகிறோம்” என அண்ணாமலையை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை “அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம்.
அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.
அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு!
தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அம்பேத்கார் – பிரதமர் மோடி ஒப்பீடு விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.