Publish Date: Wed, 03 Jan 2018 (11:11 IST)
Updated Date: Wed, 03 Jan 2018 (11:17 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்காக செய்யப்பட்ட உற்சவர் சிலையில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய ஊழலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசக்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்காக செய்யப்பட்ட உற்சவர் சிலையில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் மற்றும் ஏலவார் குழலி சிலைகளை, பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோதனை நடத்தினர். இந்த பரிசோதனையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். 75 சதவீதம் தங்கம் கலந்திருக்க வேண்டிய சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழலில் ஈடுபட்ட தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேரிடம் சிலை தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.