Publish Date: Fri, 28 Feb 2020 (18:29 IST)
Updated Date: Fri, 28 Feb 2020 (18:32 IST)
பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு பி.இ. பட்டதாரிகள்
சென்னை மாநகராட்சி சமீபத்தில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் பகுதிகளில் 2000 புதிய வாகன நிறுத்துமிட வசதிகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களை கட்டியுள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடத்திற்கான உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
10ஆம் வகுப்பு தேர்வு பெற்றிருந்தால் போதும் என்ற இந்த வேலைக்கு பல பி.ஈ பொறியாளர்கள் விண்ணப்பித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதோடு, வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமையை விளக்குவதாக கூறப்படுகிறது.
இந்த உதவியாளர்கள் வேலைக்கு 1,400 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும் அதில், 70 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும், அதில் 50 சதவீதம் பேர் பி.ஈ பொறியாளர் படிப்பு முடித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வாகன நிறுத்துமிட உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பலர் பொறியியல் துறையில் முதுகலை முடித்துள்ளவர்களும் விண்ணப்பித்துள்ளனர். பார்க்கிங் நிர்வாகத்தின் டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதற்கு இவர்கள் சிறந்த தேர்வாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பார்க்கிங் உதவியாளர்களுக்கான உண்மையான தகுதி எஸ்.எஸ்.எல்.சி. இருக்கும் நிலையில் பி.ஈ மற்றும் முதுகலை பட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பித்து இருப்பது உண்மையில் ஆச்சரியம் தான் என்று கூறினார்.
பி.ஈ படிப்புக்கேற்ற தனியார் நிறுவன வேலை கிடைத்தாலும் அதில் வேலை உத்தரவாதம், விடுமுறை ஆகியவை இருக்காது என்றும் மேலதிகாரிகளின் தொல்லை இல்லாமல் கைநிறைய அரசு வேலை என்ற கெத்து இதில் இருக்கும் என்றும் இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.