Publish Date: Tue, 23 Jan 2024 (11:09 IST)
Updated Date: Tue, 23 Jan 2024 (11:16 IST)
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு ஏழு லட்சம் அபராதம், பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டு உரிமை வழங்கிட வேண்டும் , இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் மூன்று லட்சம் ரூபாய் மற்றும் விபத்து மரணம் ஏற்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய், தனி நபர் காப்பீடு மாநில அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.