Publish Date: Tue, 15 Oct 2019 (10:45 IST)
Updated Date: Tue, 15 Oct 2019 (10:51 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாளை விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இவரை தொடர்ந்து தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதா ஜீவனும் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சீமான் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததை தொடர்ந்து அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.