Publish Date: Sat, 24 Aug 2024 (11:45 IST)
Updated Date: Sat, 24 Aug 2024 (11:48 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொட்டை கிருஷ்ணா வழக்கறிஞராக உள்ள நிலையில் அவரது தொலைப்பேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த வகையில் நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடைப்பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பு , மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பிசெல்வதற்கு முன்பு என இடைப்பட்ட காலத்தில் மோனிஷா அடிக்கடி கிருஷ்ணனுடன் தொலைப்பேசியில் பேசி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேத்தின் பேரில் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்றுள்ளது. அந்த விசாரணையில் வழக்கு ஒன்றின் சம்பந்தமாக தான் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மோனிஷாவின் கணவர் இயக்குனர் நெல்சனிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நெல்சனின் வீட்டுக்கு நேரில் சென்று மோனிஷா, மொட்டை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் அடிக்கடி எதற்காக பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.