Publish Date: Sun, 21 Mar 2021 (10:50 IST)
Updated Date: Sun, 21 Mar 2021 (10:51 IST)
தமிழகத்தில் பண்டைய தமிழ் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியில் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்படும் பொருட்கள் தமிழர்களின் பண்டைய வாழ்வியல், நாகரிகம் உள்ளிட்டவற்றை உலகிற்கு வெளிக்காட்டி வருகின்றன. இந்நிலையில் கீழடியில் அகழ்வாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
முன்னதாக பானை, கொள்கலன்கள், முதுமக்கள் தாழியின் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெல், தானியங்களை சேமிக்க பயன்படும் மண் கலன், பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கீழடியில் விவசாயம் நடைபெற்றதும், நெல், தானியங்கள் சேமிக்கப்பட்டதையும் அறிய முடிவதாக கூறப்படுகிறது.