Publish Date: Thu, 18 Jun 2020 (18:25 IST)
Updated Date: Thu, 18 Jun 2020 (18:48 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த ஏற்கனவே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி விட்டதன் காரணமாக கல்லூரி வளாகங்கள் மற்றும் தனியார் கல்யாண மண்டபங்கள் உள்பட பல இடங்களை தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்றப்பட்டு அவைகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் விடுதியை காலி செய்துவிட்டு ஜூன் 20-ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியிடம் அந்த விடுதியை ஒப்படைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பல்கலைக்கழக பதிவாளர் கருணா மூர்த்தி அவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த கடிதத்தை எழுதி உள்ளதை அடுத்து 20-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதியை சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது