Publish Date: Thu, 07 Sep 2017 (18:18 IST)
Updated Date: Thu, 07 Sep 2017 (18:21 IST)
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.
அந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அனிதாவின் மரணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
அவரது தற்கொலைக்கு நீட் தேர்வு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனிதா ரூ.1 லட்சம் செலவு செய்து பள்ளியில் படித்தார். அவருக்கு அந்த பணத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அனிதாவின் சகோதரர் மணிரத்னம் “அனிதா மீது ஆதாரமில்லாமல் புகார் கூறுகிறார் கிருஷ்ணசாமி, மனம் போன போக்கில் தன்னிச்சையாக ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு உதவியர்கள் மீதும் அவதுறாக பேசி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் என்ன நடந்தது என அவருக்கு தெரியாது” என அவர் கூறினார்.