Publish Date: Tue, 01 Dec 2020 (12:40 IST)
Updated Date: Tue, 01 Dec 2020 (12:44 IST)
வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டத்தில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தண்டவாளத்தில் சென்ற ரயிலை பாமகவினர் கல்லால் அடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமகவினர் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் குறித்து பேசியுள்ள அன்புமணி ராமதாஸ் “இடஒதுக்கீடு கோருவது சாதி பிரச்சினை அல்ல., அது சமூக நீதிக்கான பிரச்சினை. இன்று போராட்டம் நடத்துவது தொடர்பாக காவல்துறைக்கு சில மாதங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் போலீஸார் திடீரென அனுமதி மறுக்கின்றனர். சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு” என கூறியுள்ளார்.
மேலும் பாமகவினருக்கு வேண்டுகோள் விடுத்த அவர் போராட்டத்தை எந்தவிதமான வன்முறையும் இன்றி சாந்தமாக நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.