Publish Date: Thu, 12 Jul 2018 (11:01 IST)
Updated Date: Thu, 12 Jul 2018 (11:04 IST)
சேலத்தில் ஜோதிடம் பார்க்க வந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவரது கணவரை ஜோதிடர் கொலை செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் பண்ணப்பட்டியை சேர்ந்த அலமேலு. இவரது கணவர் சுரேஷ். சுரேஷ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். சுரேஷ் அடிக்கடி குடித்து வந்ததால் கணவன் மனைவிக்கிடையே சண்டை இருந்து வந்துள்ளது.
எனவே இதனை தீர்க்க அலமேலு தன் கணவனை ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்த சுந்தரம் என்ற ஜோசியரிடம் கூட்டிச் சென்றுள்ளார். குடும்பத்தில் தன் கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனை குறித்து அலமேலு ஜோசியரிடம் விளக்கியுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோசியர், அலமேலுவை தன் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இதனையறிந்த சுரேஷ் தன் மனைவியையும் அந்த ஜோசியரையும் எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அலமேலு, இனியும் கணவனை உயிரோடு விட்டால் கள்ளத்தொடர்பை தொடர முடியாது எனக் கருதி ஜோசியரிடம் தன் கணவனை கொன்றுவிடுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து சுந்தரம் சுரேஷை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து அவரை கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையை செய்த சுந்தரத்தையும் அலமேலுவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.