சென்னை டிஜிபி அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்திக்கும், விசிகவினருக்கும் இடையே எழுந்த மோதலில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி சென்னை டிஜிபி அலுவலகம் சென்ற நிலையில் அங்கே அவருக்கும், விசிகவினர் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சாலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது அவர்கள் செருப்பை வீசிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி தங்களை தாக்கியதாக விசிகவினர் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை “புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்” என விமர்சித்துள்ளார்.
Edit by Prasanth.K