Publish Date: Wed, 21 Feb 2018 (17:11 IST)
Updated Date: Wed, 21 Feb 2018 (17:31 IST)
தமிழகத்தில் தற்போது ஏர்செல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த மாநிலங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் ஏர்செல் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த ஏர்செல்லை பயன்படுத்துபவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதேபோல், வேறு நெட்வொர்க் பயன்படுத்துபவர்களால், ஏர்செல்லை பயன்படுத்துபவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர். அதோடு, ஏர்செல் நெட்வொர்க் இனிமேல் இயங்காது என்ற செய்தியும் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இன்று காலை முதல் ஏர்செல் சேவை மையங்களின் முன்பு குவிந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது, இன்னும் ஒரிரு நாட்களில் ஏர்செல் சேவை தொடரும் என அறிவித்துள்ளனர்.