Publish Date: Sat, 09 Mar 2019 (10:17 IST)
Updated Date: Sat, 09 Mar 2019 (10:18 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில்ம் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க புது யுக்தியினை அக்கட்சியினர் செயல்படுத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்த போதே அவரது முகமே எல்லா விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டது. அதிமுக வில் அடுத்தக்கட்ட தலைவர்கள என யாரும் இல்லாமல் எல்லாமே ஜெயலலிதாதான் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பிறகே இப்போது புதிது புதிதாக தலைவர்கள் அதிமுக வில் உருவாக ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.
அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க அவர்கள் மீண்டும் ஜெயலலிதாவையே நாட வேண்டியுள்ளது. தொலைபேசி போன்ற நவீன சாதனங்களின் வருகைக்குப் பின்னர் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் மூலமாக ஓட்டு கேட்கும் வழக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த தேர்தல்களில் ஜெயலலிதா தனது குரலில் வாக்குக் கேட்கும் தானியங்கி அழைப்புகள் பல தனிநபர்களுக்கு வந்தது நினைவிருக்கலாம்.
இதையடுத்து இப்போது புதிதாக அதிமுக அமைத்துள்ள கூட்டணிக்கு வாக்குக் கேட்கவும் ஜெயலலிதாவின் குரலையே நம்பி களம் இறங்கி உள்ளது அதிமுக. ஆனால் இம்முறை ஜெயலலிதாவின் குரலில் வரும் அழைப்புகளில் வாடிக்கையாளர்களின் பெயரை சொல்லி அழைத்து ஜெயலல்லிதா வாக்கு சேகரிப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வாக்கு அழைப்புகள் சில நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு அழைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.