துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்; அணிகள் இணைகிறது: இன்றே பதவியேற்பு விழா!
துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்; அணிகள் இணைகிறது: இன்றே பதவியேற்பு விழா!
Publish Date: Mon, 21 Aug 2017 (10:13 IST)
Updated Date: Mon, 21 Aug 2017 (10:25 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அணிகளாக உடைந்த அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக நண்பகலில் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் செக் வைத்தார். மேலும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையும் இதன் மூலம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் இணைப்பு அதிமுக எடப்பாடி அணிக்கு அவசியமாகியது.
கடந்த சில மாதங்களாக அதிமுக அணிகள் இணைப்புக்கான முயற்சி நடந்து வந்தது. ஆனால் ஓபிஎஸ் அணியினர் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையை வைத்து இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த இரண்டு கோரிக்கைகளையும் சமீபத்தில் நிறைவேற்றினார். இதனையடுத்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதனையடுத்து இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அதிமுக இரு அணிகளும் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த அணிகள் இணைப்பிற்கு பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர்.