Publish Date: Fri, 19 Apr 2019 (17:18 IST)
Updated Date: Fri, 19 Apr 2019 (17:21 IST)
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயாராகி வருகிறது. 4 தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் சற்றுமுன் அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது அதிமுக இந்த 4 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறுவது குறித்த அறிவிப்பு ஒன்றை அதிமுக அறிவித்துள்ளது
இதன்படி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
விருப்ப மனு பெற ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை பெற்று கொள்ளலாம் என்றும் அன்றைய தின மாலையே பூர்த்தி செய்த விருப்பமனுக்களை வழங்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.