Publish Date: Wed, 10 Jul 2024 (14:11 IST)
Updated Date: Wed, 10 Jul 2024 (14:15 IST)
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபி வாகனங்களுடன் வந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்கக்கட்டண வசூலிப்பதை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அப்போது சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபி வாகனங்களுடன் போராட்டக்காரர்கள் வந்ததாகவும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
ஆர்பி உதயகுமார் கைதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.
2024 ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, திரு. ஆர். பி. உதயகுமார் அவர்களையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.