Publish Date: Fri, 21 Jun 2019 (11:42 IST)
Updated Date: Fri, 21 Jun 2019 (11:44 IST)
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு அதிமுக அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக்கின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு, துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக கழகத்தையும், கழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது.
இதனால், அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக் கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது. எனவே இது போன்ற நாலாந்திர விமர்சனங்களுக்கு கழக சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது சிறந்தது என பதிலடி கொடுக்கப்பட்டது.
இருப்பினும் விமர்சனங்கள் தொடர்ந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் எதிர்வினையை குருமூர்த்தி தேடாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே அவரது விமர்சனங்களுக்கு கட்சி பத்திரிகை மூலம் பதில் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்தும் அவர் எங்களை விமர்சிப்பது நல்லது அல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.