Publish Date: Fri, 31 Mar 2023 (12:46 IST)
Updated Date: Fri, 31 Mar 2023 (12:47 IST)
அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை ஏப்ரல் மூன்றாம் தேதிக்கு சென்னை ஹைகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
அதிமுக பொது குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்குகளை தொடர்ந்து இருந்தனர்
இந்த வழக்குகளை விசாரணை செய்த தனி நீதிபதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று கூறியிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு முடியும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இரு தரப்பும் பதில் அளித்தன. இதனை அடுத்து இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 3 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தனர்.