Publish Date: Sun, 20 Dec 2020 (14:44 IST)
Updated Date: Sun, 20 Dec 2020 (14:48 IST)
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விஜய் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தலைவர், பொருளாளர் போன்றவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு இதில் விருப்பம் இல்லாததால் அந்த கட்சி தொடங்கும் பணி அத்தோடு தொய்வானது.
இந்நிலையில் நடிகர் விஜய் மீது அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து முன்னரே தனக்கு நெருக்கமான, விசுவாசமான நிர்வாகிகளை அழைத்து விஜய் பேசியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிருப்தி நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து பேசியுள்ளதாகவும், நீங்கள் விரும்புவது விரைவில் நடக்கும். அதுவரை யாரும் வேறு கட்சிகளில் இணைய வேண்டாம்” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.