Publish Date: Tue, 18 Sep 2018 (07:52 IST)
Updated Date: Tue, 18 Sep 2018 (08:03 IST)
ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் இடைத்தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அவரது தலைமைக்கான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் திமுக, அதிமுக, தினகரன் அணி, பாஜக, என இப்போதைக்கு நான்குமுனை போட்டி உள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை, தினகரனுக்கு பணபலம், பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி ஆகிய பலங்கள் இருப்பதால் திமுக இந்த நான்குமுனை போட்டியை சமாளித்து வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்த டி.ராஜேந்தர், திருவாரூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அத்தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவும். மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள டி.ராஜேந்தர் இந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் தனது சூறாவளி பிரச்சாரத்தாலும், ஆவேசமான பேச்சாலும் அதிக ஓட்டுக்களை பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.