Publish Date: Sat, 15 Jun 2019 (09:17 IST)
Updated Date: Sat, 15 Jun 2019 (09:19 IST)
முன்னாள் நடிகர் சங்க தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமாகிய நடிகர் சரத்குமார் மதுரையில் நேற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து பேசிய அவர் “நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும்போதே நீக்கப்பட்டவன். என்னை வெளியேற்றதான் அவர்கள் ஒரு அணியாக சேர்ந்தார்கள். இப்போது அவர்களே பிரிந்து இரண்டு அணியாக மாறிவிட்டார்கள். முன்பு இருந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இவர்கள் வந்தார்கள். இப்போது இவர்களை எதிர்த்து இவர்களிலிருந்தே சிலர் வருகிறார்கள். நான் இப்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கூட இல்லை என்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை” என்று கூறினார்.
தனது கட்சி பற்றி பேசிய சரத்குமார் “உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு என் ஆதரவு என்பதை தேர்தல் அறிவித்த பின்னர் தெரிவிக்கிறேன். இப்போது மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்காக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை சரிசெய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.