Publish Date: Mon, 08 Jan 2018 (19:16 IST)
Updated Date: Mon, 08 Jan 2018 (19:21 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போது தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டு சொன்னார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாடு பல்வேறு விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் முன்பு ஒருமுறை அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒப்பிடவே கூடாது, அது கீரியும் பாம்பும் போன்றது என கூறியதை ஒரு பத்திரிகையின் தமிழ் இணையதளம் வெளியிட்டு அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு தூர்தர்ஷன் மூலம் பேட்டியளித்த நடிகர் ரஜினி பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் அரசியல் ஆன்மீகம் ஒப்பிடுங்க? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினி, ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் கீரியும் மாதிரி, எதிர்த்திசையில் உள்ளவை என கூறியுள்ளார்.
ஆனால் தற்போது ரஜினி எதிர் திசையில் உள்ள ஆன்மீக அரசியலை மேற்கொள்ள உள்ளதால் அவரது இந்த பேட்டி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.