Publish Date: Mon, 08 Jan 2018 (18:36 IST)
Updated Date: Mon, 08 Jan 2018 (18:40 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சில ஆதரவாளர்களை தனக்கென வைத்துக்கொண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பேரவையில் இருந்து தற்போது தனது நண்பரும் டிரைவருமான ராஜாவை அதிரடியாக நீக்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா சில அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் அதிமுக தொண்டர்கள் அவரது பக்கம் சாய ஆரம்பித்தனர். ஆனால் அவரது நடவடிக்கைகள் வரவர பிடிக்காமல் போக பல தொண்டர்கள் தீபாவை விட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள சில ஆதரவாளர்களை வைத்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார். தீபா அரசியலில் இறங்கியதில் இருந்து அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அவரது நண்பரும், டிரைவருமான ராஜா என்பவர். இதனால் தீபாவின் கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே பிரச்சனை எல்லாம் வந்திருக்கிறது.
டிரைவர் ராஜாவால் தீபாவுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனாலும் அவருடைய கட்டுப்பாட்டில் தான் தீபா தொடர்ந்து இருந்து வந்தார். இந்நிலையில் அந்த ராஜாவை தனது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து நீக்கி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக தீபா தனது அறிக்கையை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து பேரவைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து A.V.ராஜா அவர்கள் விடுவிக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.