Publish Date: Sun, 20 Jan 2019 (17:33 IST)
Updated Date: Sun, 20 Jan 2019 (17:36 IST)
இன்று அதிகாலை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியதாகவும், இந்த யாகம் அதிகாலைஅ 5.30 மணி முதல் சுமார் 8.30 மணி வரை நடந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. துணை முதல்வர் அலுவலகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதாகவும் அதற்காகவே இந்த யாகம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துணை முதல்வர் நடத்தியதாக கூறப்படும் இந்த யாகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வரிப்பணத்தில் கோட்டையில் யாகம் நடத்தலாமா?. பதவிப் பிரமாணத்தை மீறி யாகம் செய்துள்ளார். வீட்டிலோ, கோயிலிலோ யாகம் நடத்தினால் அதனைப்பற்றி கவலையில்லை. கோட்டையில் யாகம் நடத்த என்ன உரிமை உள்ளது?” என்று கேள்வி மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.
அதேபோல் தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் அலுவலகத்தில் யாகம் நடத்தி இருப்பது மரபு மீறிய செயல் என்றும் இந்த சட்டவிரோதமான செயல் தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், யாகம் தொடர்பான விளக்கத்தை முதல்வரும், துணை முதல்வரும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.