Publish Date: Mon, 11 Feb 2019 (08:10 IST)
Updated Date: Mon, 11 Feb 2019 (08:14 IST)
உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்து வரும் தாயை பார்த்துக்கொள்ள விடுப்பு தர இன்ஸ்பெக்டர் மறுத்ததால், மனமுடைந்த போலீஸ் ஏட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர் மாமணி. வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியை சேர்ந்தவர் ஆவார். மாமணிக்கு, வளர்மதி என்ற மனைவியும் ,12 வயதில் ஒரு மகளும்,8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மாமணியினா தாயார் சரோஜினி வயோதிக காலத்தில் படுக்கையில் இருக்கிறார். அவருக்கு மருந்தூட்டுவது முதல் குளிப்பாட்டுவது வரை அனைத்து பணிவிடைகளையும் மாமணி தான் செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாருக்கு உடல்நலம் இல்லை என்ற தகவல் வந்தவுடன் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிடம் லீவு கேட்டாராம். ஆனால் இன்ஸ்பெக்டரின் அனுமதி இல்லாமல் 6 நாள்கள் விடுப்பு எழுதி நிலையத்தில் சமர்ப்பித்துவிட்டு ஊருக்கு போய் விட்டாராம் மாமணி. அங்கிருந்தபடியே தனது விடுப்பை இன்ஸ்பெக்டர் ஏற்றுக் கொண்டாரா என்று கேட்டிருக்கிறார் . இல்லை என்று தெரியவரவே மன உளைச்சலில் `மீண்டும் பணிக்குச் சென்றால் இன்ஸ்பெக்டர் என்ன சொல்வாரோ’ என பயந்து விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.