Publish Date: Sat, 14 Jul 2018 (13:25 IST)
Updated Date: Sat, 14 Jul 2018 (13:30 IST)
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் திருமால். இவர் பிளஸ் 2 வில் 1135 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
திருமால் சென்னையிலுள்ள கே.எம்.சி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த திருமால், அங்கு தங்கப் பிடிக்காததால் நெற்குன்றத்தில் தனியாக வீடு எடுத்து தனது தாயுடன் வசித்து வந்தார்.
சிறு வயதிலிருந்தே தனிமையில் வாடிவந்த திருமால், பயங்கர மன அழுத்தத்திற்கு ஆளானார்.
இந்த வேளையில் திருமாலின் தாய், ஊருக்கு சென்றுவிட, திருமால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை காப்பாற்றிய சக மாணவர்கள் சிகிச்சைக்குப் பின் அவரது வீட்டில் மாணவனை விட்டுச் சென்றுள்ளனர். தற்கொலை செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திருமால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாணவனின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.