Publish Date: Wed, 04 Dec 2019 (16:43 IST)
Updated Date: Wed, 04 Dec 2019 (16:46 IST)
வேலூர் காட்டுப்பகுதியில் அனகொண்டா பாம்பு ஒன்று திரிவதாக வெளியான வீடியோவால் அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் வேலூர் அருகே உள்ள மோர்தாணா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை பெய்யும் காலங்களில் மழை வெள்ளதோடு வேறு சில உயிரினங்களும் குடியாத்தம் காட்டுப்பகுதிக்கு வந்துவிடுவது உண்டு.
இந்நிலையில் அணைக்கட்டு பகுதியில் உள்ள காட்டில் மிகப்பெரும் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட இளைஞர்கள் சிலர் அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ வேலூர் காட்டில் அனகொண்டா பாம்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் “அது அனகொண்டா வகை பாம்பு இல்லை. அது பெரிய மலைப்பாம்பு” என்று கூறியுள்ளனர். மேலும் மக்கள் யாரும் அந்த காட்டுக்குள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனகொண்டா வகை பாம்புகள் தென் அமெரிக்காவின் மத்திய காட்டுப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் மிகப்பெரும் பாம்பு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.