Publish Date: Tue, 23 Apr 2024 (14:53 IST)
Updated Date: Tue, 23 Apr 2024 (14:55 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக வேன் ஒன்று எருமைகளை ஏற்றி சென்றுள்ளது. பல்லடம் பேருந்து நிலையத்தைக் வேன் கடந்த போது உள்ளே இருந்த எருமை துள்ளி குதித்து ஓடும் வேனில் இருந்து சாலையின் நடுவே விழுந்தது.
இதில் எருமையின் இடது கொம்பு முறிந்து ரத்தம் கசிந்த நிலையில் எருமையின் உடலில் பலத்த சாறு காயங்கள் ஏற்பட்டன. இதனைக் கண்ட வேன் ஓட்டுநர் எருமை கீழே விழுந்தது கூட தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கீழே விழுந்த எருமையின் கொம்பு உடைந்து ரத்தம் வெளியேற, உடலில் ஏற்பட்ட காயங்களுடன் சாலையில் துடித்தபடி கிடந்த எருமையை அங்குள்ள பொதுமக்கள், அருகே இருந்த ஆட்டோவை வரவழைத்து எருமையை ஏற்ற முயன்றனர்.
அதிக எடையின் காரணமாக எருமையை தூக்க முடியாததால் சாலையில் இருந்த எருமையின் மீது தண்ணீர் ஊற்றினர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எருமையை ஆட்டோவில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த எருமையின் மீட்க நடந்த ஒரு மணி நேர போராட்டத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.