Publish Date: Fri, 12 Feb 2021 (11:35 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (16:29 IST)
ஈச்சனாரி அருகே பேக்கரியின் கதவை உடைத்து ரூ.40,000 பணத்தை வாலிபர் ஒருவர் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த பொன்னழகன் என்பவர் கோவை ஈச்சனாரி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் கடையின் கதவை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்ட பொன்னழகன் இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது தனது பேக்கரி கடையின் கதவு திறக்கப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி திறக்கப்பட்டு இருந்ததோடு அதனுள் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 40,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மதுக்கரை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் இரவு 11 30 மணியளவில் கதவை திறந்து உள்ளே வருவதும் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பணத்தை கொள்ளையடித்து செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் அந்த வாலிபர் கல்லாப் பெட்டியின் மூன்று அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிப்பதும் கடைசி அறையில் பணம் இருப்பது தெரியாமல் அருகில் இருந்தசிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு பேக்கரியில் கொள்ளையடித்த வாலிபர் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.