Publish Date: Wed, 01 Jul 2020 (07:27 IST)
Updated Date: Wed, 01 Jul 2020 (07:30 IST)
39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே., விஸ்வநாதன் அவர்கள் காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றம். இதனால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராக(தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய மண்டல ஐ.ஜி., யாக இருந்த அமல்ராஜ் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராகவும்; சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம் மத்திய மண்டல ஐ.ஜி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ரவி சிறப்பு அதிரடிப்படை(ஈரோடு) ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை காவல் துறையின் வடக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், ஐ.ஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கும், கோவை சரக டி.ஐ.ஜியாக நரேந்திரன் நாயர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்