Publish Date: Sat, 27 Nov 2021 (08:29 IST)
Updated Date: Sat, 27 Nov 2021 (08:31 IST)
சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் அண்ணா சாலை, தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஆம், ரங்கராஜபுரம் மற்றும் தி நகர் மேட்லி சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பாதை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.