Publish Date: Thu, 11 Jan 2024 (13:29 IST)
Updated Date: Thu, 11 Jan 2024 (13:42 IST)
கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2023-24ம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் உரையில் பருவநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகையால் ஏற்படும் அழுத்தம் காரணமாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணியை உலக வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக கடல் அரிப்பை தடுப்பது, கடல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் கடல் பல்லுயிரியலை பாதுகாப்பது ஆகிய நோக்கங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடல் வளத்தை பாதுகாக்க, ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.