Publish Date: Wed, 23 May 2018 (09:55 IST)
Updated Date: Wed, 23 May 2018 (11:02 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகளில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது. பொதுமக்கள் பேரணியை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், போராட்டம் கலவரமாகி, துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், இறந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்கள் பெற்று செல்லும் வரை, அதாவது 25ம் தேதிவரை 144 தடை உத்தரவு தொடரும் என செய்திகள் வெளியாகியுள்ளது.