Publish Date: Thu, 02 Jun 2022 (12:08 IST)
Updated Date: Thu, 02 Jun 2022 (12:14 IST)
மனித வாழ்வைப் பொறுத்த வரை நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இடையூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் மீறி நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து செயல்களையும் நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
தியானத்தினை ஏதோ சொல்கிறார்கள் செய்துதான் பார்ப்போமே என்றோ, பரிசோதித்துப் பார்த்து விடுவோம் என்றோ தியானம் செய்யப் புகுந்தால் நம் மனமே நமக்கு மிகப் பெரிய இடையூறாகி விடும்.
நாம் ஒரு குறிப்பிட்ட நிலையை தியானத்தில் அடையும் வரை சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும்.அதுபோல தியானமும் அத்தியாவசியத் தேவைதான் என்கிற அழுத்தமான எண்ணம், நம்பிக்கை முதலில் நம் மனதில் எழ வேண்டும்.
மனதை ஒரு நிலைப்படுத்துவது என்பது பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட நிலையை தியானத்தில் அடையும் வரை சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும்.
அது வரையிலும் தன் போக்கில் அலைந்து, திரிந்து கொண்டிருந்த மனதை கட்டிப் போடுவது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை. தியானத்தில் அமர்ந்து கொண்டு நம் மனம் போடும் ஆட்டத்தை சிவனே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் போதும். அதுவே ஆடி அடங்கி விடும். மாறாக அதை அடக்கி, ஒடுக்கி, அதன் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதுவே பெரிய போராட்டமாக முடியும்.
பலவீனமான மனமே சலனப்பட்டு அலைந்து கொண்டிருக்கும். சலனமற்ற நிலையை மனம் அடைய வேண்டுமென்றால் அது பலமடைய வேண்டும். அத்தகைய மனோபலத்தை தியானத்தின் மூலமாகவே அடைய முடியும். அது படிப்படியாகவே நிகழும். நம் விடாமுயற்சியால்தான் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.