Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் லவங்கப்பட்டை...!!

பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் லவங்கப்பட்டை...!!
சீதபேதி, ரத்தப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் திறன் கொண்டது. பிரசவ வலி குறைபாடு, மாதவிலக்கு பிரச்னைகள், நாள்பட்ட இடுப்புவலிகளை குணப்படுத்த லவங்கப்பட்டை பயன்படுகிறது.
வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த  துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்  செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.
 
சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள்  இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றை சம அளவு எடுத்து நான்கில் ஒரு பங்காக வற்றியதும் காலை, மாலை அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.
 
சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம்  முறியும்.
 
வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும்  சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.
 
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு  வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.
 
தாது நட்டம் உள்ளவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும்  பெறலாம்.
 
லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு கொதிக்க வைத்து போதிய சூட்டில் வாய் கொப்புளிக்க பல் வலி போகும். வாய் நாற்றம் விலகி  பற்கள் ஆரோக்கியம் பெறும்.
 
லவங்கப்பட்டையில் ‘மாங்கனீஸ்’ என்னும் தாது உப்பு அதிக அளவு இருப்பதால் மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது. மாங்கனீஸ் எலும்புகளை பலப்படுத்தக்கூடியது. மேலும் ரத்தத்தையும் இணைப்புத் திசுக்களையும் பலப்படுத்தவல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு  மாங்கனீஸ் இன்றியமையாததாக விளங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும பராமரிப்பில் அற்புத பலன்கள் தரும் ஆவாரம் பூ...!!