Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்?

சந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்?
, சனி, 7 செப்டம்பர் 2019 (17:40 IST)
இன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால் பாறைகள், தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியை கண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் லேண்டர் தரை இறங்கியிருக்கும்.

அதிலிருந்து வெளி வந்த பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி என்னவெல்லாம் செய்திருக்கும் என்று விளக்குகிறது இந்த கட்டுரை.

ஒரு நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் வேகம்

விக்ரம் எனும் லேண்டர் தரையிறங்கியவுடன் அதிலிருந்து வெளிவரும் ஆய்வு ஊர்திக்கு பிரக்யான் என்று பெயர். இதற்கு சம்ஸ்கிருத மொழியில் 'ஞானம்' என்று பொருள். மொத்தம் 27 கிலோ எடை கொண்ட இந்த ஊர்தி மொத்தம் ஆறு சக்கரங்களை கொண்டது.
webdunia

இந்த ஆய்வு ஊர்திக்கு தேவையான மின்சாரம் அதன் மேற்புற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் பெறப்படும்.

ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் தூரம் மட்டுமே நகரும் திறன்பெற்ற பிரக்யானால் தனது ஆயுட்காலத்தில் அதிகபட்சம் 500 மீட்டர்கள் மட்டுமே நகர முடியும்.

இதன் ஆயுட்காலம் ஒரேயொரு நிலவு நாள்தான். அதாவது, நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். பிரக்யானால் லேண்டரான விக்ரமுடன் மட்டுமே தகவல்களை பகிர்ந்துகொள்ள/ பெற்றுக்கொள்ள முடியும்.

என்னென்ன ஆய்வுகள்?

விக்ரம் எனும் லேண்டரிலிருந்து தரையிறங்கும் பிரக்யான், தனது முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கேமராக்களை கண்களை போன்று பயன்படுத்தி தனது பாதையை தெரிவு செய்யும்.

பிரக்யானை நேரடியாக பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்க முடியாது; அதே போன்று பிரக்யானும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை நேரடியாக அனுப்பாது. இந்த இருவேறு நிகழ்வுக்கும் விக்ரம்தான் இணைப்பு பாலமாக செயல்பட்டு தொடர்பாடலுக்கும், இயக்கத்துக்கும் உதவும்.

உதாரணமாக, நிலவின் மேற்பரப்பை பிரக்யான் படம் எடுத்து விக்ரமுக்கு அனுப்பும்; அதை உடனடியாக விக்ரம் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். ஒருவேளை, அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை செய்வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் விரும்பும் பட்சத்தில், அதற்கான கட்டளைகள் விக்ரமுக்கு அனுப்பப்பட்டு, அதன் வழியாக பிரக்யான் இயக்கப்படும்.

ஒருவேளை பிரக்யான் பயணப்படும் பாதையில் பாறைகள் உள்ளிட்ட தடுப்புகள் இருந்தால், அதை மீறி செல்வதற்கு அதன் ஆறு சக்கரங்கள் கொண்ட அமைப்பு உதவுகிறது.

இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பிரக்யான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஏபிஎக்ஸ்எஸ் (APXS) மற்றும் எல்ஐபிஎஸ் (LIBS) ஆகிய உதிரிபாகங்கள், இருவேறு எக்ஸ்-ரே கதிர்களையும், லேசரையும் வெளிப்படுத்தி நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து அதில் சோடியம், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கா, கால்சியம், டைட்டானியம், இரும்பு மற்றும் ஸ்ட்ரோண்டியம், யட்ரியம் மற்றும் சிர்கோனியம் போன்றவற்றின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்யும்.
webdunia

பிரக்யான் நிலவின் பரப்பில் ஆய்வு செய்யும்போது, நீர் அல்லது பனிக்கட்டியின் இருப்பு உறுதிசெய்யப்பட்டால், அது பூமியின் துணைக்கோள் எதிர்காலத்தில் மனிதனின் வாழ்விடமாக மாறுவதற்கான மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்குமென்று கருதப்படுகிறது.

இவை கண்டறியும் விடயங்கள் குறித்தும், திரட்டும் தரவுகளையும் விக்ரமுடன் பகிர்ந்து, அது பிறகு பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்தை வந்து சேரும்.
பிரக்யானின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் இந்தியாவிலேயே மேம்படுத்தப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கிரவாண்டி உங்களுக்கு, நாங்குநேரி எங்களுக்கு! – காங்கிரஸின் கிரேட் டீல்!